ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடியும் மறு கன்னத்தில் இந்தியக் கொடியும் வரைந்த பாகிஸ்தானியப் பெண்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகலுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்தானது.. இந்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலிக்குப் பாகிஸ்தான் இரசிகை ஒருவர் பாராட்டு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் மழையின் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போட்டி ரத்தான நிலையில் இரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது இரு நாட்டு இரசிகர்களிடம் பேட்டி எடுத்தனர்.
பாகிஸ்தான் இரசிகை ஒருவர் கூறும் போது, “விராட் கோலி எனக்கு மிகவும் பிடித்த வீரர். நான் அவரது தீவிரமான இரசிகை. அவரை பார்ப்பதற்காகதான் இங்கு வந்தேன். இந்த போட்டியில் அவர் சதம் அடிப்பார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் அவரை பார்த்தது எனக்கு மகிழ்ச்சியே” என்றார்.
அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் கோலிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே என கேள்வி கேட்டனர். அதற்கு அந்த இளம்பெண் தனது கன்னத்தை காட்டினார். அதில் ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடி, மற்றொரு கன்னத்தில் இந்திய தேசியக் கொடி வரையப்பட்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் இரசிகர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது அந்த இளம்பெண், “அங்கிள் நாம் அண்டை நாட்டுகாரர்களை நேசிப்பது ஒன்றும் மோசமான விஷயம் இல்லை” என பதிலடி கொடுத்தார்
பின்னர் அந்த இரசிகையிடம் கோலி அல்லது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் உங்களின் விருப்பம் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு அவர் விராட் கோலி என பதில் அளித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.