ஆயுஷ் மருந்துகளை, குறிப்பிட்ட நோய்களுக்குப் பரிந்துரை செய்யலாமே தவிர, அந்த மருந்துகள் நோயைக் குணப்படுத்தும் என, விளம்பரம் செய்யக்கூடாது என்று இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான நோய்களுக்கு, அலோபதி மருத்துவத்தைப் போல், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன.
அலோபதி மருத்துவத்தைப் போன்று, ஆயுஷ் மருத்துவத்தில் போதிய அளவு ஆராய்ச்சி செய்யாததால், பல நோய்களுக்கு நேரடியாகப் பரிந்துரைக்க முடியாத சூழல் உள்ளது. அதேநேரம், பாரம்பரிய மருந்துகள் வாயிலாகச் சர்க்கரை நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்று சிலர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
அதாவது, கேரள மாநில நாளிதழ் ஒன்றில், தனியார் நிறுவனம் ஒன்று, அலோபதி தவறாக வழிகாட்டுகிறது என்ற தலைப்பில், ஒரு விளம்பரம் வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளிட்ட தீராத நோய்களை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக குணப்படுத்த முடியும். மேலும், சர்க்கரை நோய்க்கு இன்சுலின் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கேரள மாநில ஆயுர்வேத மருந்து கட்டுப்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்ட நாளிதழிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்திலும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக, நம்பத்தன்மையற்ற விளம்பரங்கள் அதிகம் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில மருந்து உரிம அலுவலர்கள் அனுமதி பெறாத மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதுகுறித்து இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் மானேக்சா கூறியதாவது, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட, 142 நோய்களுக்கு, மருந்துகள் இருந்தால் அவற்றைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், குணப்படுத்தும் என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்யக்கூடாது. மற்ற மருத்துவச் சிகிச்சை முறைகளைத் தாழ்த்தும் வகையிலான விளம்பரமும் செய்யக்கூடாது. புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.