இன்றைய போட்டி இந்தியா, தென் ஆப்பரிக்கா என இரு அணிகளும் தங்களது பலத்தை நிருபிக்கும் விதமாக இருக்கும்.
ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடவுள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகள் என்றால் அது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என்றே சொல்லலாம்.
இந்தத் தொடரில் இதுவரை இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் 7 போட்டிகளிலும் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் யாரும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.
அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தில உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரும்பாலும் 300 ரன்களை கடந்துள்ளது.
ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 90 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 50 முறையும் இந்தியா 37 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவு வெளியிடப்பட இல்லை.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சமநிலையான மற்றும் சாதகமான சூழலை வழங்குவதில் புகழ்பெற்றது. இருப்பினும், நேரம் போக போக மைதானத்தில் வேகம் குறைந்து, ஸ்பின்னர்ஸ்களுக்கு சாதமாக அமைகிறது.
வானிலை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும் எனவும் பகல் நேரத்தில் 30 டிகிரிக்கு மேலும், இரவில் 20 வரை குறையவும் வாய்ப்புள்ளது. பனிப்பொலிவு இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தொடரிலிருந்து விலகிவிட்ட நிலையில், பவுலிங்கில் அவரது இடத்தை சிறப்பாக நிரப்பியுள்ளார் முகமது ஷமி. அதேவேளையில் பேட்டிங்கில் அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்த சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான பாணி ஆட்டத்தால் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பேட்டிங்கில் ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோரின் பார்ம் பற்றி கேள்வி எழுந்த நிலையில், கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டம் மூலம் இருவரும் அதை சரி செய்தார்கள்.
பவுலிங் தற்போது இருக்கும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் காம்போ இந்தியாவுக்கு நன்கு கைகொடுக்கும் விதமாக உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் முக்கிய பவுலர்களான பும்ரா அல்லது சிராஜ் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு அளித்து விட்டு சோதனை முயற்சியாக அஸ்வினை அணிக்கு மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது.
தென் ஆப்பரிக்காவை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் அணி முதல் பேட்டிங்கில் மிரட்டலாகவும், சேஸிங்கில் தடுமாறியும் வருகிறது. அதேபோல் பவுலர்களையும் ஆடுகளம் மற்றும் சுழலை பொறுத்து மாற்றி அமைத்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை களமிறக்கவும் வாய்ப்பு உள்ளது. உலகக் கோப்பை 2023 தொடரின் டாப் ரன் ஸ்கோரர் குவன்டைன் டி காக் தென் ஆப்பரிக்கா ஓபனிங் பேட்ஸ்மேனாக இருப்பதுடன், இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக இருந்துள்ளார்.
எனவே இந்தியாவுக்கு சரியான சவால் மிக்க அணியாகவே தென் ஆப்பரிக்கா உள்ளது. மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்தியா 64% வெற்றி பெரும் என்றும் தென் ஆப்பிரிக்கா 36% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.