உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்த தகவலை அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.
அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் கோவிலில் இருக்கும் வசதிகள் குறித்து கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தக் கோவில் பாரம்பரிய நாகர் கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (பெரும்பாலும் மால்வா, ராஜ்புதானா மற்றும் கலிங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமானது).
கோவிலின் நீளம் (கிழக்கிலிருந்து மேற்கு) – 380 அடி, அகலம் – 250 அடி, உயரம் – 161 அடி. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்ட 3 அடுக்கு அமைப்பாக இருக்கும். கோவிலில் மொத்தம் 392 தூண்களும் 44 வாயில்களும் இருக்கின்றன.
பிரதான கருவறையில் பகவான் ஸ்ரீராமரின் குழந்தை வடிவம் (ஸ்ரீராம் லல்லா சர்க்கார் தெய்வம்) வீற்றிருக்கும். மேலும், முதல் தளத்தில் ஸ்ரீராம் தர்பார் இருக்கும். கோவிலில் நடனம், வண்ணம், சபா, பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை ஆகியவற்றுக்காக 5 அரங்குகள் இருக்கும்.
தூண்கள் மற்றும் சுவர்கள், தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் செதுக்கப்பட்ட சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. சிங்த்வாரில் இருந்து 32 படிக்கட்டுகளில் ஏறி கிழக்குப் பகுதியில் இருந்து கோயிலுக்குள் நுழையலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சாய்வுதளம் மற்றும் லிப்ட் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
கோவிலைச் சுற்றி ஒரு செவ்வக வடிவிலான காம்பவுண்டு சுவர் இருக்கும். இதன் மொத்த நீளம் 732 மீட்டர் மற்றும் அகலம் 14 அடி. பூங்காவின் 4 மூலைகளிலும் சூரிய கடவுள், அன்னை பகவதி, கணபதி மற்றும் சிவன் ஆகியோருக்கு 4 கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
அன்னபூரணி மற்றும் அனுமன் கோவில்கள் முறையே வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருக்கின்றன. கோவிலுக்கு அருகில் புராண காலத்து சீதாகூப் இருக்கிறது. மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத்ராஜ், மாதா ஷபரி மற்றும் ரிஷிபத்னி தேவி அஹில்யா ஆகியோருக்கும் இவ்வளாகத்தில் கோயில்கள் உள்ளன.
தென்மேற்கு பகுதியில் உள்ள நவரத்தின குபேர் திலாவில் உள்ள பழமையான சிவன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, ஜடாயு சிலை நிறுவப்பட்டிருக்கிறது. கோவில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. அதேபோல, தரையிலும் கான்கிரீட் இல்லை.
கோவிலின் கீழ் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர் காம்பாக்டட் கான்கிரீட் (ஆர்.சி.சி.) அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது. கோவிலை மண்ணின் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க 21 அடி உயரத்தில் கிரானைட் கற்களாலான பீடம் கட்டப்பட்டிருக்கிறது.
மேலும், சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீயை அணைக்கும் நீர் அமைப்பு மற்றும் மின் நிலையம் போன்ற வசதிகளும் கோவில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
25,000 பேர் தங்கும் அளவுக்கு யாத்ரீகர்கள் மண்டபம் கட்டப்பட்டு, லாக்கர்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தவிர, கோவில் வளாகத்தில் குளியலறை வசதிகள், கழிப்பறைகள், தொட்டிகள், குழாய்கள் இருக்கின்றன.
இந்திய பாரம்பரியத்தைப் பின்பற்றி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 70 ஏக்கர் பரப்பளவில் 70% பசுமையாகவே இருக்கும்.
ஸ்ரீராம ஜென்மபூமி கோவில் கட்டுமானம் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. கோவிலின் கட்டுமானத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு 1,400 கோடி ரூபாய் முதல் 1,800 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவில் அறக்கட்டளை கட்டுமானத்திற்காக 60 முதல் 70 லட்சம் ரூபாய் வரை நன்கொடை பெறுகிறது.