கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் சேலத்தில் 6-ந் தேதி தொடங்குகிறது.
விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் சென்னையில் கடந்த 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற்றன.
மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. சென்னையை தொடர்ந்து சேலத்தில் வரும் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகளை நடத்துகிறது.
6-ந் தேதி தடகள போட்டிகள் நடைபெறும். 7-ந் தேதி கபடி, 8-ந் தேதி கோ-கோ, 9-ந் தேதி வாலிபால், 10-ந் தேதி கால்பந்துப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.
தொடக்க நாளில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெள்ளிப்பதக்கம் வென்ற பவித்ரா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.