காவல்துறையினருக்கும், போக்குவரத்து துறையினருக்கும் இடையேயான மோதல் பெரிதாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் ஒருவரை சட்டப்படி பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று கூறி நடத்துனர் வற்புறுத்திய விவகாரத்தில், அந்த காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் அரசு ஓட்டுனர்கள் மீது காவல்துறை நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறையோ அல்லது காவல்துறையோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளதாக நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது நாள் வரை அரசு பேருந்துகளின் விதி மீறல்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் இரு துறையினருக்கும் இடையேயான மோதல் பெரிதானால் உருவாகும் பாதிப்புகள், பொது மக்களுக்கு தான் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.