சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் திகழ்வதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக விளையாட்டுத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு உள்ளிட்டவை நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
10 சட்டமன்றத் தொகுதிகளில் 5 முக்கிய விளையாட்டுகளுக்காக தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 2 ஆயிரத்து 738 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 87 கோடியே 61 லட்சம் ரூபாய் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி போன்ற சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழகம் திகழ்வதாகவும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.