திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி அனுப்பிய மனுவிற்கு, சம்பந்தப்பட்ட நபர் உயிரோடு இருக்கும் நிலையிலேயே அவர் இறந்துவிட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சியமாக பதிலளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கிருஷ்ணகுமார் என்கிற கந்தன், தன்னை விடுதலை செய்து தமிழகத்திலேயே வாழ அனுமதிக்கக் கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, அவரது மனு சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகுமார் உயிருடன் இருக்கும் நிலையிலேயே, அவர் உயிரிழந்துவிட்டதால் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, அயலக தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனரகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அலட்சி நடவடிக்கை குறித்து கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.