பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூரில் உள்ள வேப்பூர் வார ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள வார ஆட்டுச் சந்தையில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
பக்ரீத் பண்டிகை நெருங்குவதையொட்டி சென்னை, தேனி, நாகை ,கோவை ,விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், இஸ்லாமியர்களும் ஆடுகள் வாங்க திரளாக வருகை தந்தனர்.
சந்தையில் கொடி ஆடு, கருப்பாடு,வெள்ளாடு உள்ளிட்ட 10 ரக ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதனையடுத்து 10 மணி நேரத்தில் 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல தென்காசி பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.