ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக அரசு செலவில் கட்டப்பட்ட ஆடம்பர மாளிகையின் வீடியோவை தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில்,தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான காந்தா ஸ்ரீனிவாஸ், விசாகப் பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டாவில் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்டியுள்ள பிரம்மாண்டமான ஆடம்பர மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார்.
தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மக்களுடன் சென்ற அவர், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆடம்பர மாளிகையின் போட்டோக்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக அரசு செலவில் கட்டப்பட்ட இந்த சொகுசு மாளிகை சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கடற்கரை அருகே, ருஷி கொண்டா மலைகளின் நடுவே இந்த ஆடம்பர மாளிகை அரசு செலவில் கட்டுப்பட்டு வந்தது. மீண்டும் முதல்வர் ஆன பின், பிரஜா வேதிகா என்ற பெயரில், முகாம் அலுவலகமாக இந்த ஆடம்பர மாளிகையைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு அலுவலகம் என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் , ஜெகன் மோகன் ரெட்டியின் ஆடம்பர மாளிகையாகவே மக்களால் பார்க்கப் படுகிறது. பாதுகாப்பு காரணமாக , இதுவரை இந்த மாளிகைக்குள், யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அப்படியென்ன பிரம்மாண்டம் என்று கேட்கலாம்? தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய மாளிகை இதுவாகும்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த கிரானைட்கள், பளபளக்கும் கண்ணாடிகள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பாத் டப் எனப்படும் குளியல் தொட்டிக்கு மட்டும் 26 லட்சம் ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது.
முதல்வர் முகாம் அலுவலகம் என்ற பெயரில், மக்களின் வரிப்பணம் சுமார் 500 கோடி ரூபாயை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீணடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் , அரண்மனை போன்ற இந்த பிரஜா வேதிகா என்ற கட்டிடம் , அனைத்து அரசு விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆடம்பர மாளிகை குறித்து, விரைவில் முறையான விசாரணை செய்யப்படும் என்றும், இந்த மாளிகையை வேறு எதற்கு பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே,ஹைதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில், நடை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப் பட்டுள்ளன. தங்களுக்கு இடையூறாக இருப்பதாக மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.