பீகாரில் வேலை வாங்கி தருவதாக சொல்லி, 100க்கும் மேற்பட்ட பெண்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததாக அம்பலமாகியிருக்கிறது. மேலும் ஒரு பெண்ணை பெல்டால் அடித்து கொடூரமாக துன்புறுத்தும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
வேலை தேடும் இளம்பெண்களைக் குறி வைத்து ஒரு மோசடி கும்பல் கடந்த 3 ஆண்டுகளாக குற்றங்களில் ஈடுபட்டு விவகாரம் இப்போது வெளிவந்துள்ளது.
இந்த மோசடிகும்பலின் குற்றச் செயல்கள், பீகாரைத் தாண்டி உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் வரை பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் மாவட்டத்தில், 18,000 முதல் 20,000 ரூபாய் வரை ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதோடு, அடித்து துன்புறுத்திய கும்பலிடமிருந்து தப்பித்து வந்த பெண் ஒருவர் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியான பெண்களுக்கான வேலைவாய்ப்புக்கள் பற்றி சம்பந்தப் பட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதாகவும்,வேலைக்கு விண்ணப்பித்து தேர்வானதும்,பயிற்சிக் கட்டணம் என்ற பெயரில் 20000 ரூபாய் கட்டச் சொன்னதாகவும், தெரிவித்துள்ளார்.
கட்டணத்தைக் கட்டியவுடன், அஹியாபுர் பகுதியில் ஒரு வீட்டில் மற்ற இளம் பெண்களுடன் அடைத்து வைக்கப் பட்டதாகவும்,கிட்டத்தட்ட 3 மாதங்களாகியும் ஊதியம் தரப்பபடாததால் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் , அதற்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளரான திலக் என்பவர், மேலும் 50 இளம் பெண்களைச் சேர்த்துவிட்டால் கூடுதலாக 50,000 ஊதியம் தருவதாக உறுதிஅளித்ததாகவும் தெரிவித்துளளார்.
சில பேரை சேர்ந்துவிட்ட பிறகு அந்த உரிமையாளர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் பெல்டால் அடித்து துன்புறுத்தப் பட்டதாகவும், கூறியுள்ள பாதிக்கப் பட்டப் பெண், இளம் பெண்களுக்கு நடக்கும் இந்த கொடூரத்தைப் பற்றி தீவிர விசாரணை நடத்தப் படவேண்டும் என்றும், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக முசாபர்பூர் துணை எஸ்பி வினிதா சின்ஹா கூறியதோடு, பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப் படி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டு, உரிய தண்டனை வழங்கப் படும் என்று பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா உறுதி அளித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் இளம்பெண்களைக் குறி வைத்து நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் வருகிறது. வேலைவாய்ப்பு என்று நம்பி வந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று தெரிய வருகிறது.
2022ம் ஆண்டு முதல் பீகார் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இதுகுறித்து பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கிழக்கு சம்பாரண் மற்றும் முசாபர்பூர் போன்ற மாவட்டங்களில் இந்த வேலை மோசடி கும்பல் மீது ஏராளமான புகார்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் தொடர்புகளை வைத்துக்கொண்டு இளம் பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.