கள்ளச்சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாகுளம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்து துயரமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் மது மற்றும் போதை பொருட்கள் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை பலமுறை சுட்டிக்காட்டியும், திமுக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை என சாடியுள்ளார்.
ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல நாட்களாக நடைபெற்று வருவதாக கூறியுள்ள அவர், இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.