ஒவ்வொரு எம்பியும் கட்சி வேறுபாடின்றி நாட்டிற்கு சேவையாற்றுவதை முதல் கடமையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி ஒரு மந்திரத்தை வழங்கியதாக தெரிவித்தார். நாடாளுமன்ற நடத்தை விதிகளை எம்பிக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக கூறினார்.
எம்பிக்கள் தகவல்களை சரி பார்த்து பேச வேண்டும் என்றும், ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். பாஜக கூட்டணியின் வெற்றியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் தவிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்ததாகவும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.