பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் கடந்த மாதம் 27-ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பலர் நடித்துள்ளனர். பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால் கல்கி படம் மூலம் COME BACK கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பிரபாஸ். கல்கி படத்தின் பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்பதால் இந்த அழுத்தம் சற்று அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில் ஜூன் 27-ல் வெளியான கல்கி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முதல் பாதி சொதப்பல்… இரண்டாம் பாதி மிரட்டல் என்றெல்லாம் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். க்ளைமாக்ஸில் வரும் இரண்டாம் பாகத்துக்கான லீட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் முதல் நாளில் சுமார் 200 கோடி ரூபாயை வசூலித்த கல்கி திரைப்படம், ஐந்து நாட்களில் 600 கோடி ரூபாயை தாண்டியதாக கூறப்பட்டது. தற்போது கல்கி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தங்கல், பாகுபலி 2, KGF 2, RRR, பதான், ஜவான் ஆகிய படங்களுடன் கல்கி படமும் 1,000 CRORE CLUB-ல் இணைந்துள்ளது.
மகாபாரதத்தை தழுவி எடுக்கப்பட்ட கல்கி படத்தில் அமைந்த VFX ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது. ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கல்கி படக்குழுவை பாராட்டினர். குறிப்பாக நாயகன் பிரபாஸுக்கு யோசனை சொல்லி வழிநடத்திய புஜ்ஜி என்ற கார் அனைவரையும் கவர்ந்தது. ரோபோ போன்ற அந்த கதாபாத்திரத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் கீர்த்தி. அவரது குரல் புஜ்ஜி கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றியது.
இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் புஜ்ஜி வடிவமைக்கப்பட்டது தமிழகத்தில்தான். சென்னை MAHINDRA RESEARCH VALLEY-ல் வேலுசாமி என்பவர் தலைமையிலான குழுவே புஜ்ஜியை வடிவமைத்தது. கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமேட்டிவ் நிறுவனம்தான் புஜ்ஜிக்கு உருவம் கொடுத்தது.
கல்கி படத்தின் மற்றொரு சிறப்பு கமல்ஹாசன். சில நிமிடங்களே வந்தாலும் தனது குரலாலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார் கமல்.
தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கல்கி படம் கொண்டு சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.