2031-ல் இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், 2060-ல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் மாறும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் டி பத்ரா கூறியிருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த மார்ச் மாத கடைசியில், இந்தியா 3.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறி இருக்கிறது. அதாவது , மாற்று விகிதத்தின் படி இந்தியா 295.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
தொழிலாளர் உற்பத்தித்திறன், உள்கட்டமைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்தியா பல்வேறு சவால்களைக் கடந்து சாதனை செய்து வருகிறது.
முசோரி, லால் நகரில் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன், சார்பில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கானகூட்டம் நடைபெற்றது. ‘எதிர்காலத்தைத் தயார்படுத்தும் இந்தியாவின் நிதியியல் கொள்கை’ என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் டி பத்ரா,உரையாற்றினார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த பத்து ஆண்டுகளில், ஆண்டுக்கு 9.6 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதத்தில் இந்திய முன்னேறும் என்றும், அதன் காரணமாக 2031 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய வளர்ந்த பொருளாதாரமாக இந்தியா மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
14,005 அமெரிக்க டாலர் தனிநபர் வருமான அளவு இருக்கும் போது, ஒரு நாடு நடுத்தர பொருளாதார நாடாக இருக்கிறது. தனி நபர் வருமானம் 34,000 அமெரிக்க டாலராக மாறும் போது நாடு வளர்ந்த நாடாக மாறுகிறது.
ஜிடிபி அளவில், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மற்ற நாடுகளுடன் ஓப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது. எனவே பெரிய நாட்டின் வாங்கும் சக்தியின் சமநிலையைக் கொண்ட பொருளாதாரத்தின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டும்.
வாங்கும் சக்தியின் சமநிலை அடிப்படையில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது 16 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும்.
இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) அளித்துள்ள அறிக்கையில் இந்தியா 2048ம் ஆண்டில் அமெரிக்காவை முந்திக் கொண்டு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்போதைய மாற்று விகிதத்தில் 295.4 லட்சம் கோடி ரூபாய் அல்லது 3.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. அதாவது நாட்டின் தனிநபர் வருமானம் 2 லட்சத்து 7ஆயிரத்து 30 என குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் குழுவில் இந்தியா உள்ளது.
ரூபாயின் உள் மற்றும் வெளி மதிப்பு இரண்டும் பாதுகாக்கப்படும் வகையில், இந்தியாவில் பணவீக்கத்தை சர்வதேச பணவீக்கத்துடன் ஒன்றிணைவதை நோக்கி செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், இது தான், ரூபாயின் சர்வதேசமயமாக்கலுக்கும், நாளைய உலகின் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுப்பதற்கும் களத்தைத் தயார் செய்யும் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.