தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தொலைக்காட்சி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது, 78வது சுதந்திர தினத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஊழியர்கள் 5 உறுதிமொழியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
குடும்ப ஒற்றுமைதான் நமது தேசத்தின் அடையாளம் என்றும், அதனை ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றும், மாதம் தோறும் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவதால் குடும்ப ஒற்றுமை பலப்படும் எனவும் கூறினார்.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பருவம் தவறி மழை பெய்வதாக தெரிவித்த அவர், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், தனிமனித ஒழுக்கம்தான் தேசத்தை வளர்ச்சியடைய செய்யும் என்றும் தெரிவித்தார்.