விநாயகர் சதுர்த்தியையொட்டி, வழிபாட்டு குழுவினருக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்றும்,
விநாயகர் சிலைகளை வைக்கும் முன் காவல் துறை உதவி ஆணையர் அல்லது மாவட்ட துணை ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவித்துள்ளார்.
தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிர்மாணிக்கப்படும் சிலைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டுமென கூறியுள்ள டிஜிபி சங்கர் ஜிவால், பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் சிலைகள் வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஒலிபெருக்கி வைப்பதற்கு முன் காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும், விநாயகர் சிலைகளை மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் வைக்கக் கூடாது என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
இதேபோல பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாது என்றும்,
மாற்று மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷமோ, ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசுகளோ வெடிக்கக் கூடாது எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.