நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170 ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 300-க்கும் மேற்பட்ட வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்து உள்ளன.
மீட்பு பணிகளுக்காக 20 ஆயிரத்திற்கும் கூடுதலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.