ரத்தன் டாடாவின் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறைக்கு மகத்தான பங்களிப்பு வழங்கியவர் ரத்தன் டாடா என புகழாரம் சூட்டினார். மேலும், ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என கூறியுள்ளார்.
மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.மேலும், தொழில்துறை மற்றும் சமூகத்திற்கு தனது இணையற்ற பங்களிப்புகளால்
நவீன இந்தியாவை வடிவமைத்த தொலைநோக்கு தலைவர் என புகழாரம் சூட்டினார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், வாழ்நாள் முழுவதும் தொண்டு மற்றும் சமூக சேவை செய்து புதிய அர்த்தத்தை கொடுத்தவர் ரத்தன் டாடா என கூறியுள்ளார்.
மேலும், அவரை இழந்து வாடும் டாடா குழுமத்திற்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.