ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 34 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரும் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 19 மீனவர்கள் மட்டும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதாக கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் 16 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், படகு ஓட்டிய 3 மீனவர்களுக்கு தலா 60 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 16 பேரை 6 மாதமும், படகை ஓட்டிய 3 பேரை ஓராண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 மீனவர்களின் படகு எண் தவறாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கிளிநொச்சி நீதிமன்றம் அறிவித்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.