முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அதனால், வங்கதேசத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரமான மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குக் காரணமான மாணவர்கள் போராட்டத்துக்கு, இப்போது இருக்கும் இடைக்கால அரசும் அப்போது, வங்கதேச தேசிய கட்சியும் ஆதரவு அளித்தன.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய உடனேயே முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதற்கிடையே ஷேக் ஹசீனா நாட்டில் இல்லாத நிலையில் அவரது அவாமி லீக் கட்சி பலவீனமடைந்துள்ளது. இந்தச் சூழலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சி தீவிரமாக உள்ளது.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் பொது தேர்தலை இடைக்கால அரசு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனாலும், வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் தேர்தலை நடத்த முகமது யூனுஸின் இடைக்கால அரசுக்கு வங்கதேச தேசிய கட்சி அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், பரம எதிரி கட்சிகளான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் மற்றும் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் முகமது யூனுஸ் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
அவாமி லீக் கட்சி, நாடு தழுவிய பேரணிகளையும், அதன்பிறகு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதேபோல், நாட்டின் மொத்தமுள்ள 64 மாவட்டங்களிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வங்கதேச தேசிய கட்சி அறிவித்துள்ளது.
அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு ஒருங்கிணைத்த ஆன்லைன் நிகழ்ச்சியில், உரையாற்றிய ஷேக் ஹசீனா, இடைக்கால அரசுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்திருந்தார்.
அதே நேரத்தில், மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா அழைப்பு விடுத்ததன் காரணமாக, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் ஏந்தி, மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டுக்குள் நுழைந்து தாக்கினர். அங்கிருந்த முஜிபுர் ரஹ்மானின் படங்களை சேதப்படுத்தினர். வீடு தீயிட்டு எரிக்கப்பட்டது. கிரேன் மற்றும் பிற இயந்திரங்கள் உதவியுடன் முஜிபுர் ரஹ்மானின் வீடு இடித்து நொறுக்கப்பட்டது.
முஜிபுர் ரஹ்மானின் வீடு கொளுத்தப்பட்ட அதே நேரத்தில், வங்க தேசத்தில் இருக்கும் ஷேக் ஹசீனாவின் உறவினர்கள் மற்றும் அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், அங்கு 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முகமது யூனுஸ் உத்தரவின் பேரில், இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அது குறித்து எந்த தகவலும் இல்லை என்று டாக்கா நகர் காவல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, நாட்டின் சுதந்திரத்தை சில புல்டோசர்களை கொண்டு முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்றும், கட்டடங்களை இடிக்கலாம், ஆனால் வரலாற்றை சேதப்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி வெளியிட்ட அறிக்கையில், இடைக்கால அரசில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும், நாட்டில் வன்முறை கலாசாரத்தைக் கட்டுப்படுத்தி, சட்டம்- ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறினால் பாசிச சக்திகள் மீண்டும் தலைதுாக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியகட்சி வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற தெளிவான திட்டத்துடன் உள்ளது. சரியான நேரத்தில் தேர்தல் நடத்தவும் இடைக்கால அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த போராட்டங்களை வழிநடத்திய மாணவர்கள் சொந்த அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.