தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், தருமபுரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் நடைபெற்று வருவதன் எடுத்துக்காட்டுதான் இது என குற்றஞ்சாட்டி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிவதாகவும் கூறியுள்ளார்.
ஆட்சியரையே மிரட்ட துணிந்தவர்கள் சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களை வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும் என்றும் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.