அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜரான இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையிலும், அரசு இணைய தளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பேசியதாகவும், அவதூறு கருத்து எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தி வெளியிட்ட நாளிதழ் வருத்தம் தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியது அவதூறு கருத்து தான் எனக் கூறினார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு, தயாநிதி மாறன் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஆணையிட்டார்.