நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பலில் கட்டணம் 8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் குழும தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இருநாட்டு பயணிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேஷன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிவகங்கை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருவதாகவும், இதில் கோடை விடுமுறை முன்னிட்டு பயணிகளை கவரும் விதமாக 8,500 ரூபாயாக உள்ள கட்டணம் 8000 ரூபாயாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் தற்பொழுது 10 கிலோ வரை அனுமதிக்கப்படும் இலவச லக்கேஜ் இனி 22 கிலோ வரை அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் ஜூன் முதல் வாரத்தில் 250 பேர் பயணிக்க கூடிய கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும், கார்கோ கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கப்பல் நிறுவனத் தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.