வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி – கச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2022-2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 10 பேரில் 8 பேர் அடுத்தடுத்து 6 மாதங்களில் உயிரிழந்தனர்.
தனியார் பல் மருத்துவமனையிலிருந்து, மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக 8 பேர் இறந்ததாகப் பத்திரிகையில் செய்தி வெளியானது. உயிரிழந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம்குமார், தனது தாயின் மரணத்திற்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேரில் ஆய்வு மேற்கண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், விசாரணை முடிந்த பிறகு விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.