வத்தலக்குண்டு அருகே நீதிமன்ற உத்தரவின்படி சாலை அமைக்க கோரியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே வக்கம்பட்டியில் கடந்தாண்டு இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை பொது வீதியில் நடத்தக் கூடாது என குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதி மறுத்ததற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொது வீதியில் செல்ல யாரையும் தடுக்கக் கூடாது என்றும், காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், பொது வீதியில் செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால் வக்கப்பட்டியைச் சேர்ந்த இந்து அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கடுமையாக தாக்கினர். இந்நிலையில், திண்டுக்கல்லில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அங்கு சென்ற வக்கம்பட்டி பகுதி மக்கள், போலீசார் தாக்கியதால் உடம்பில் ஏற்பட்ட காயங்களை அவரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 6ஆம் தேதிக்குள் வக்கம்பட்டியில் தார் சாலை போடவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர், காவல்துறையை தூண்டுவிட்டு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.