நாமக்கல், திருப்பூர் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது பிரிவு உபாச்சார விழாவில் பெண்கள், திருநங்கைகள் கண்கலங்கியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் உமா, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வெளியிட்டனர்.
தொடர்ந்து சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள ஆட்சியர் உமாவிற்கு, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியது நீங்கள் தான் எனத் திருநங்கைகள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனைக் கண்டு ஆட்சியர் உமாவும் கண்கலங்கியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இதேபோல் திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
அப்போது வீடுகளின்றி சாலையோரம் வசித்த 40 குடும்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிக் கொடுத்து ஆட்சியர் தனது சொந்த செலவில் டைல்ஸ் அமைத்துக் கொடுத்ததாகக் கூறி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
மேலும் நரிக்குறவர் இன பெண்கள் உருவாக்கிய பாசிமணி மாலையை ஆட்சியருக்கு அணிவித்து மகிழ்ந்தார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.