தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு குடமுழுக்கு பணிக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்பி கனிமொழி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பக்தர்கள் வாகன நிறுத்துமிடம், கோயில் யாகசாலை, பக்தர்கள் தங்குமிடம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, குடமுழுக்குக்கான அனைத்து பணிகளும் வரும் 2-ந் தேதிக்குள் முழுமை பெறும் என தெரிவித்தார். குடமுழுக்கு விழா நடைபெறும் மேல்தளதத்தில் அனுமதிக்க கூடிய பக்தர்கள் குறித்து, வரும் 2-ந் தேதி இறுதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு பக்தர்களுக்காக ஒளிபரப்பப்படும் எனவும் சேகர்பாபு தெரிவித்தார்.