கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் தீ விபத்துக்குள்ளான மின்சார வாகன பேருந்திலிருந்து 26 பயணிகளைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்கள் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருச்சியில் இருந்து கோவை நோக்கி 26 பயணிகளுடன் சென்ற தனியார் மின்சார பேருந்து, கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது தனியார் பேருந்தின் பின்புறத்தில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த லாரி ஓட்டுனர்களான சபரிமலை மற்றும் ரமேஷ் ஆகியோர், இரும்பு ராடால் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்த நிலையில், பயணிகள் 18 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் துரிதமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய லாரி ஓட்டுநர்களை கருமத்தம்பட்டி போலீசார் சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினர்.