பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3 புள்ளி 16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3 புள்ளி 16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோதிலும் அதனை அரசே ஏற்கும் என்றும்,
இதேபோன்று சிறு-குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் அரசே ஏற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறு வணிகர்களுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அவர்களுக்கு இது பொருந்தாது எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும், இதன்மூலம் அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோதிலும் அதனை அரசே ஏற்கும் என்பது வரும் காலத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்னேற்பாடு என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.