ஜம்மு-காஷ்மீரில் நடந்து வரும் ஆப்ரேஷன் அகால் நடவடிக்கையின் 9வது நாளில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அங்கே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டபோது, அகால் ஆப்ரேஷன் தொடங்கியது.
டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, துணை ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அகால் ஆப்ரேஷன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 9 நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்த நிலையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடந்த சண்டையில், இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாட்டுக்காகப் பணியாற்றிய துணிச்சலான வீரர்களான பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோர் வீரமரணமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.