டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகத் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இருப்பினும் நீதிமன்ற தடையை மீறி சம்பந்தப்பட்ட இருவருக்கும் அமலாக்கத்துறைச் சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.