நாமக்கல்லில் கோழிப்பண்ணை மற்றும் நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலையில் உள்ள எம்ஜி நகரில் வசித்து வரும் வாங்கிலி சுப்பிரமணியம் என்பவர் வாங்கிலி பீட்ஸ் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கோழிப்பண்ணைகளை நிறுவித் தொழில் செய்து வருகிறார்.
தமிழ்நாடு முட்டை கோழி மார்கெட்டிங் அசோசியேஷன் தலைவராக உள்ள வாங்கிலி சுப்பிரமணியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்ஜி நகரில் உள்ள வாங்கிலி சுப்பிரமணியம் வீடு அதன் அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.