அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தால், வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.
மக்களவையில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.
அப்போது, விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளைப் பாதுகாப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் இந்தியாவில் பொருள்களைத் தயாரிப்போம், இந்தியாவில் வடிவமைப்போம் போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க உதவும் எனவும் தெரிவித்தார்.
வரி விகிதம் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்ட பிறகு, அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளில் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய உத்வேகம் கிடைக்கும் என்றும், இந்த ஒப்பந்தமானது திறமையான இந்தியர்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் கூறினார். இருதரப்பினரும் தொழில்நுட்ப செயல்முறைகளை நிறைவு செய்வதில் பணியாற்றி வருவதாகவும், விரைவில் அது அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
















