ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் இடையே உரையாற்றிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வளர்ந்த நாடாக மாறாதது குறித்து கவலை தெரிவித்தார். நமக்கு பின் சுதந்திரம் பெற்ற நாடுகள் கூட நிர்வாகத் திறமையால் முன்னேறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் தெளிவான இலக்குகள் இல்லாமல் இந்தியா பயணித்ததாகவும், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகே, 2047-க்குள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தென்னிந்தியாவில் சினிமா மீதான ஆர்வம் அதிகம் உள்ளதாகவும், ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களைப் பின் தொடர்வதைக் கைவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
















