செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக பகுதியில், முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அடங்கிய போர்டு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, என்டிஏ கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான வணிக வளாக கட்டடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய லைட் போர்டு வைக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது தேர்தல் அலுவலர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, செஞ்சி நான்குமுனை சாலையில் என்டிஏ கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்ட நிலையில், திமுகவினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
















