தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு, கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இதுவரை தாராள இறக்குமதிக்கு உரியவை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இனி அவை கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை என்ற பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்திடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே நகைகளை இறக்குமதி செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி ஒப்பந்தங்களுக்கும், திரும்பப்பெற முடியாத வங்கி உத்தரவாத கடிதங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்களின் கீழ் முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டிருந்தாலும், சரக்கு பரிமாற்றம் எந்த நிலையில் இருந்தாலும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
















