மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அடல் பிஹாரி வாய்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி பிறந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். இந்திய விடுதலைக்குப் பிறகு நடந்த 2-வது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பாரதிய ஜனசங்க கட்சியின் மக்களவைத் தலைவராக 1957 முதல் 1977வரை இருந்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
மேலும், 1980 முதல் 6 ஆண்டுகள் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தார். இது தவிர, இந்திய பிரதமராக 3 முறை பதவி வகித்தார். பா.ஜ.க.வின் முதல் பிரதமர் என்கிற பெயருமையைப் பெற்றவர் வாஜ்பாய். எல்லாவற்றுக்கும் மேலாக, இவரது ஆட்சியின்போதுதான் கார்கில் போரில், பாகிஸ்தானை இந்திய இராணுவ வீரர்கள் விரட்டி அடித்தார்கள். வயது முதிர்வு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனது 93-வது வயதில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார்.
இவரது 5-ம் ஆண்டு நினைவுதினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், டெல்லியிலுள்ள வாஜ்பாயின் நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பா.ஜ.கவிலிருந்து முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய், கட்சியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். மேலும், 6 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை சிறப்பாக நடத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார். வாஜ்பாய் காலத்தில் நாடு பெரிதும் பயனடைந்திருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் நாட்டை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இந்தியாவின் 140 கோடி மக்களுடன் சேர்ந்து இன்று நான் அவருக்கு மரியாதை செய்கிறேன்” என்றார்.
அதேபோல, வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை நாடு முழுவதும் இருக்கும் பா.ஜ.க.வினர் அனுஷ்டிக்குமாறு, கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அப்போது, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அவற்றில் தற்போதுவரை நீடித்திருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், இந்த நினைவுதினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.