தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 48.23 அடியாக உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாசனத் தேவைக்கு ஏற்ப அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விடப் பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 29-ந் தேதி முதல் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,430 கன அடியிலிருந்து 8,060 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 48.24 அடியிலிருந்து 48.23 அடியாக குறைந்துள்ளது. மேலும், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும், காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவும் ஒரே அளவில் இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீளும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.