உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் இந்தப் போட்டிகள் மீது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இந்தியா பாகிஸ்தான் போன்ற அணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.
ஆனால் இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி பாதியிலே ரத்தானது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. போட்டி நடைபெறும் கொழும்பு மற்றும் கண்டியில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்துக்கு நடைபெறும் அனைத்து போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அடுத்து போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஜெய்ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. தம்புலாவில் தற்போது மழை இல்லை என்பதால் அங்கு போட்டி நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய ஹோட்டல் வசதிகள் இல்லாததால் இந்திய வீரர்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் என புகார் எழுந்துள்ளது.
மேலும் ஹம்பன் தோட்டாவில் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டது.ஆனால் அது காட்டுக்கு நடுவில் இருப்பதால் ஹோட்டலுக்கும் கிரிக்கெட் மைதானத்துக்கும் நீண்ட தூரம் இருக்கும் என்று புகார் எழுந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முழித்து வருகிறது. இதனால் பல இரசிகர்களும் போட்டியை பாகிஸ்தானில் நடத்தி இருந்தால் இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் போட்டிகளை இலங்கையிலிருந்து இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்ற முடியுமா என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் யோசித்து வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அருகில் வந்துவிட்டதால் அதற்கும் நேரம் இருக்காது என்பதால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.