ஆசியக் கோப்பை 2023 நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று நடந்த 6 வது லீக் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர், இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 121 ரன்களில் இருந்த போது அணியின் 4வது விக்கெட்டும் பறிபோக, அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற நிலையில் இருந்தது.
அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் ரன்ரேட்டை முகமது நபி மற்றும் ஹஸ்மதுல்லா ஷாகிதி கூட்டணி மளமளவென உயர்த்தியது. குறிப்பாக அதிரடியாக ஆடிவந்த முகமது நபி 24 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் விளாசினார். 24 பந்துகளில் அரைசதம் விளாசியதால், முகமது நபி அதிவேகமாக அரை சதம் விளாசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமைப் பெற்றார்.
சிறப்பாக விளையாடி வந்த நபி, தீக்ஷனா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். இவர் 32 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 65 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் வந்த கரீம் ஜனட் ஷாகிதியுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் கிடைத்த பந்துகளைப் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தனர். ஆனால் இருவரும் இலங்கை அணியின் துனித் வீசிய 32வது ஓவரில் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆகி தங்களது விக்கெட்டை இழந்தனர். அடுத்தடுத்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் இழந்ததால் ஆஃப்கானிஸ்தான் அணி நெருக்கடிக்கு ஆளானது.
அதன் பின்னர் இணைந்த நஜிபுல்லா மற்றும் ரஷித்கான் கூட்டணி ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ற வகையில் இருவரும் சிறப்பாக விளையாடினர். 36வது ஓவரில் நஜிபுல்லாவும், 38வது ஒவரின் முதல் பந்தில் ரஹ்மானும், மூன்றாவது பந்தில் ஃபரூக்கியும் தங்களது விக்கெட்டை இழக்க, 38.3 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் சார்பில் ரஜிதா 4 விக்கெட்டுகளும், தனஞ்செயா மற்றும் துனித் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.