தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அமைப்பு சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை சம்பந்தப்படுத்திப் பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையானது. பா.ஜ.க. உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யவும், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கவும் வலியுறுத்தியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில், தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேபோல, நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.
அடுத்து, சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு பேசினார். அவரது இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் ஆளுநரிடம் மனு தெரிவிக்கப்பட்டது.
பாஜகவின் கோரிக்கையை ஏற்று, 10-ம் தேதிக்குள் சேகர் பாபு, அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தமிழக பாஜக கெடு விதித்தது. ஆனால், அவர் பதவி விலகவில்லை. இதனால், 11-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு, பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட, திமுக எம்பி ஆ.ராசா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியதால், கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு எதிராகத் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் நலசங்கத்தின் நிர்வாகிகளும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சங்க நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சர்ச்சை தொடர்பாகவும், அதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும், டெல்லியில் ஆலோசனை நடத்த, ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவில் உள்ள சிலரது பதவிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.