மணிப்பூர் கலவரம் தொடர்பான முழுத் தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. காவல்துறையைச் சேர்ந்த 3 ஐ.ஜி.க்கள் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதி நடந்த பேரணியின்போது, கூகி பழங்குடியினருக்கும், மெயிட்டி சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக வெடித்த நிலையில், ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமான தேவாலயங்கள், கோவில்கள் எரிக்கப்பட்டன. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் ஆடையின்றி நிர்வாணமாக, ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னமும் கலவரம் முழுமையாக ஓய்ந்த பாடில்லை.
இந்த நிலையில், கலவரத்தால் மணிப்பூரில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த தகவல்களை காவல்துறையைச் சேர்ந்த 3 ஐ.ஜி.க்கள் வெளியிட்டுள்ளனர். ஐ.ஜி. (செயல்பாடுகள்) ஐ.கே.முய்வா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மணிப்பூரில் இந்த சவாலான நேரத்தில் காவல்துறை, மத்தியப் படைகள் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவை இயல்பு நிலை திரும்ப 24 மணி நேரமும் முயற்சி செய்து வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க முடியும்.
வன்முறையின்போது, ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுவரை 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 5,172 தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 254 கிறிஸ்தவ ஆலயங்கள், 132 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பிஷ்னுபுர் மாவட்டம் பௌகாக்சாயோ இகாயில் இருந்து சுரசந்த்புர் மாவட்டம் கங்வாய் வரையிலான பாதுகாப்பு தடுப்புகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, ஐ.ஜி. (நிர்வாகம்) கே.ஜெயந்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கலவரத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள் உறவினர்களால் உரிமை கோரப்பட்டுள்ளது. 96 பேர் உடல்கள் உரிமை கோரப்படவில்லை. இம்பாலில் உள்ள மருத்துவமனைகளில் 56 உடல்களும், சுரசந்த்புர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 42 பேர் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது. இக்கலவரம் தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
மண்டலம் 3 ஐ.ஜி. நிஷித் உஜ்வால் அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலை 32, தேசிய நெடுஞ்சாலை 2 ஆகியவற்றில் தற்போது வழக்கமான முறையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.