மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் இந்திய அணி ஆசியக் கோப்பை வென்றதை வாழ்த்தும் விதமாக மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார்.
2023-யின் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, சிராஜ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 50 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது சிராஜ்க்கு கொடுக்கப்பட்டது. சிராஜ் அந்த பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு பரிசாக கொடுத்தார். இதை தொடர்ந்து இந்திய அணியை கௌரவிக்கும் விதமாகவும் சிராஜை பாராட்டும் விதமாகவும் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் இரவு நேரத்தில் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார்.
அந்த சிற்பத்தில் அவர், ஒரு கிரிக்கெட் பேட் வரைந்து அதன் மையப்பகுதியில் பந்து போல் வரைந்து அதன் உள் சிராஜ் படத்தை வரைந்துள்ளார். கிரிக்கெட் மட்டையில் ” congrats team bharath ” என்று எழுதியுள்ளார். சிராஜின் படத்திற்கு கீழே ” hats off to siraj ” என்றும் அதன் கீழே ” asia cup ” என்றும் எழுதியுள்ளார். மேலும், சில தட்டுகளை பயன்படுத்தி அந்த மணல் சிற்பத்தை அழகுப் படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன் பட்நாயக், 8 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற பாரத அணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.