தமிழகத்தில் இன்னமும் தீண்டாமை கொடுமை நிலவி வருவது மிகவும் வெட்கக்கேடானது என்று மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
75 -ம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் 90 -ம் ஆண்டு ஹரிஜன் சேவா சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியைக் கொண்டு வருவதில் காந்தி முக்கிய பங்காற்றினார்.
பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை மதம், நிறம், இடங்கள் அடிப்படையில் பிரித்தனர். மகாத்மா காந்தி இந்தியர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக்கினார்.
தீண்டாமை கொடுமை நிகழ்த்தும் பலர் இன்னும் இந்த நாட்டில் உள்ளனர். தீண்டாமைக்கு எதிராக கடும் சட்டங்கள் இருந்தும், ஹரிஜன மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடக்கிறது. ஹரிஜன பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதனை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது.
இன்னும் பல இடங்களில், பல பள்ளிகளில், கோவில்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை தமிழகத்தில் உள்ளது.
இந்தக் கொடும் குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர் தண்டனைகளிலிருந்து தப்பிவிடுகின்றனர். குற்றம் செய்தவர்களுக்கு உரியத் தண்டனை கிடைப்பதில்லை. இதனால், இது போன்ற குற்றங்கள் தொடர்கிறது.
முன்னேறிய மாநிலம் எனக் கூறும் தமிழகத்தில் தற்போதும் தீண்டாமைக் கொடுமை நிலவுவது என்பது மிகவும் வெட்கக்கேடானது என்றார்.