அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையினர் விசாரணைக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இருதயவலி ஏற்பட்டது என அவர் சொன்னதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14 -ம் தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தால், அதை வைத்து தானும் சரண்டர் ஆகி ஜாமின் பெற்றுவிடலாம் என அவரது சகோதரர் அசோக் குமார் தரப்பு கணக்குப் போட்டது. இதனால், அமலாக்கத்துறையினர் கைகளில் சிக்காமல் தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், அசோக் குமாரை பிடிக்க, அமலாக்கத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மத்திய உளவுத்துறையின் உதவியை நாடியுள்ளது. இதனால், விரைவில் அசோக் குமார் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.