தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி வழி மற்றும் ஆங்கில வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழ் மட்டுமின்றி 22 மாநில மொழிகளில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இது முதலில் 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதனைத்தொடர்ந்து, 8 -ம் வகுப்பு வரை படிப்படியாக நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம் என்பதால், சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் தமிழ்மொழி மேம்படவும் தமிழ் மொழியில் மாணவர்கள் எளிதாகப் பாடத்தை கற்றுக் கொள்ளவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்புக்குத் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.