மத்தியப் பிரதேசம் , சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்தியத் தேர்தல் குழுக் கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இவற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளும் மேற்கண்ட மாநிலங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சற்று முன்னிலையில் சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 39 பேர் அடங்கிய முதல் பட்டியலை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதியே பா.ஜ.க. வெளியிட்டது. இதையடுத்து, செப்டம்பர் 13-ம் தேதி தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள கட்சியின் தலைமயகத்தில், பா.ஜ.க.வின் மத்தியத் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 25-ம் தேதி மேலும் 40 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது. இன்னும் 151 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மீதமுள்ள 69 பேர் அடங்கிய பட்டயல் வெளியிடப்பட வேண்டும். அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்துக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான மீதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, பா.ஜ.க. மத்தியத் தேர்தல் குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள அனைத்து இடங்களும் ஏ., பி., சி. மற்றும் டி என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏ வகையில், கட்சி தொடர்ந்து வெற்றிபெற்று சிறப்பாகச் செயல்படும் இடங்கள் அடங்கும். அதேபோல, பி பிரிவில் வெற்றி மற்றும் தோல்விகளின் கலவையான இடங்கள் உள்ளன. மேலும், சி வகையில் கட்சி ஒப்பீட்டளவில் பலவீனமான இடங்களைக் குறிக்கிறது. இதற்கு நேர்மாறாக, கடந்த 3 தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் இடங்கள் டி பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.