சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டு நாள் பயணமாக, தென் மாவட்டங்களுக்குச் சென்றிருந்தார். நேற்று, சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றார். அங்கிருந்து குற்றாலம் சென்றார். மாலையில் வேளாண்மை தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடலில் பங்கு பெற்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இரண்டாவது நாளான இன்று 29-ம் தேதி, காலையில், நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவர் மற்றும் ஒண்டிவீரன் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஆளுநர் ரவி அவர்கள், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் புரிந்த துணிச்சல்மிகு தளபதியும் வீரம் மிக்க சுதந்திர போராட்ட வீரருமான ஒண்டிவீரனுக்கு பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.