நியூஸ் கிளிக் என்ற இணையதள இதழின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இந்த நிறுவனம் சீன நிறுவனங்களுடன் கைகோர்த்துச் செயல்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் ஆபத்தாக முடியும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதனால், இந்த நிறுவனத்தை கண்காணிப்பது மிகவும் முக்கியம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், நியூஸ் கிளிக் இணையதள இதழ் சட்டவிரோத பணப்பரிமாற்றமும் நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் டெல்லி அலுவலகத்தில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த நிறுவனத்தில், பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.